திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2020 11:30 PM GMT (Updated: 8 March 2020 6:50 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சிக்கிய புதுக்கோட்டையை சேர்ந்தவர் உள்பட 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த சங்கர்(வயது 34) என்பவர் பசை வடிவில் தனது உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து 376 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 57 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.36 லட்சத்து 41 ஆயிரம்

இதேபோல் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்(45) என்ற பயணி தனது உடலில் பசை வடிவில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 450 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.19 லட்சத்து 84 ஆயிரம் ஆகும்.

இதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் மொத்தம் ரூ.36 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story