ஊரடங்கு உத்தரவை மதிக்காத புதுச்சேரி மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம்


ஊரடங்கு உத்தரவை மதிக்காத புதுச்சேரி மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 March 2020 12:05 AM GMT (Updated: 25 March 2020 12:05 AM GMT)

ஊரடங்கு உத்தரவை மதிக்காத புதுச்சேரி மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. புதுவை மாநிலத்திலும் இதேபோல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 22-ந்தேதி மக்கள் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவுக்கு நாட்டு மக்களிடையே பெருத்த வரவேற்பு இருந்தது. அன்றைய தினம் இரவு 9 மணிமுதல் வருகிற 31-ந்தேதி வரை புதுவை மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவினை தொடர்ந்து புதுவையில் பிற மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. உள்ளூர் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

கொரோனா தொற்று பரவுவதை மக்கள் கூட்டமாக கூடாமல் இருப்பதால் மட்டுமே தடுக்க முடியும் என்பதால் புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமல்படுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இந்த ஊரடங்கு உத்தரவின்போது மளிகை, காய்கறி, பால், மருந்து விற்பனை கடைகள் திறந்திருக்கும் என்று கூறினார். மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட்டமாக கூடாமல் வாங்கி செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

போலீசாருக்கு தலைவலி

இந்த உத்தரவின்படி புதுவை மாநிலத்தின் எல்லை நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து வெளிமாநில வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வருபவர்கள் முக்கியமான பணிகளுக்கு மட்டுமே புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் மட்டும் பலத்த சோதனைக்குப்பின்னர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன. இருந்தபோதிலும் புதுவைக்குள் வர அனுமதி கிடைக்காதவர்கள் முக்கிய வழிகளை தவிர்த்து கிராமப்புறங்கள் வழியாக புகுந்து வாகனங்களை ஓட்டி வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்துவது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் புதுவை பொதுமக்களும் காலை முதலே தங்கள் வாகனங்களில் வலம் வரத்தொடங்கினர். அவர்களை ஆங்காங்கே இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். முக்கிய சாலை சந்திப்புகள், சிக்னல்களில் வாகனங்கள் நுழைய முடியாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

வாக்குவாதம்

இருந்தபோதிலும் நகரப்பகுதியில் உள்ள சிறுசிறு இணைப்பு சாலைகளுக்குள் புகுந்து இருசக்கர வாகனங்களில் பலர் வந்தனர். தடுக்க முயன்றதால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடுப்பு நடவடிக்கையை கைவிட்டனர்.

மார்க்கெட்டுகள், கடைவீதிகளுக்கு வந்த பொதுமக்கள் வழக்கம்போல் பொருட்களை வாங்கி சென்றனர். சிலர் குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து வந்து இருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை எச்சரித்த போது வாக்குவாதம் செய்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் கைவிட்டனர்.

பெட்ரோல்- டீசல் காலி

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்தபோதிலும் புதுவையில் நேற்று அத்தியாவசிய தேவைக்காக மளிகை, காய்கறி, பழக்கடைகள், பால் பூத்துகள், பெட்ரோல் பங்குகள் திறந்திருந்தன. 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி இருசக்கர மற்றும் கார்களில் வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட அதிக அளவில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு சென்றனர். இதனால் மதியத்துக்கு மேல் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் காலியானது.

புதுவையில் இருந்து கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வெளியே செல்ல தடை இல்லை. ஆனால் தடைக்காலம் முடியும் வரை மீண்டும் அவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று மாநில எல்லைகளில் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Next Story