ஈரோடு அருகே நள்ளிரவில் கணவன், மனைவி வெட்டிக்கொலை: தீபாவளி தினத்தில் சோகம்


ஈரோடு அருகே நள்ளிரவில் கணவன், மனைவி வெட்டிக்கொலை: தீபாவளி தினத்தில் சோகம்
x
தினத்தந்தி 14 Nov 2020 11:30 PM GMT (Updated: 14 Nov 2020 6:58 PM GMT)

ஈரோடு அருகே நள்ளிரவில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தீபாவளி தினத்தில் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அருக்காணி(45). இவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு மேனகா என்ற மகளும், யுவராஜ், பூபதி என்ற 2 மகன்களும் உள்ளனர். மேனகாவுக்கு திருமணம் ஆகி விட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மேனகா, தனது கணவர் பெருமாள் மற்றும் மகன் வைரமூர்த்தி(13) ஆகியோருடன் தந்தை ராமசாமியின் வீட்டுக்கு வந்தார்.

அவர்கள் வரும் வழியில் அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பெருமாள் மற்றும் மேனகாவை கிண்டல் செய்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கைகலப்பு ஆனதில் பெருமாள், மேனகா ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்த தகவல் அறிந்த ராமசாமி, அருக்காணி மற்றும் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தட்டிக்கேட்டனர். மேலும் பெருமாள், மேனகாவை தாக்கியவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே முதலில் நடந்த தாக்குதலில் காயம் அடைந்த பெருமாள், மேனகா 2 பேரும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தகராறு முடிந்த பின்னர் ராமசாமி, அருக்காணி ஆகியோர் வீட்டுக்கு திரும்பினார்கள். யுவராஜ் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.

நள்ளிரவில் ராமசாமியும், அருக்காணியும் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களுடன் மேனகாவின் மகன் வைர மூர்த்தியும் உறங்கினார். நேற்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் ராமசாமி மற்றும் அருக்காணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 2 பேரையும் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்கள். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது ராமசாமியும் அருக்காணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வைர மூர்த்தி இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, கொடூரமாக கொலை சைய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக சந்தேகத்துக்கு இடமான சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளி தினத்தில் கணவன் -மனைவி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதுபற்றி கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story