உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

image courtesy: ANI
உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில நிவாரணத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல், சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை ஃபதேபூரில் மின்னல் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ரேபரேலி மாவட்டத்தில், மின்னல் தாக்கி ஒருவரும், மழை தொடர்பான சம்பவத்தில் மற்றொருவரும் உயிரிழந்தனர். புலந்த்ஷாஹர், கன்னோஜ், மெயின்புரி, கவுசாம்பி, ஃபிரோசாபாத், பிரதாப்கர், உன்னாவ் மற்றும் மைன்புரி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 45 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது. ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் சமீபத்தில் பெய்த கனமழையை கருத்தில் கொண்டு, நேபாள எல்லையோரம் உள்ள மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.






