மின்னணு வாக்கு எந்திரம் பற்றிய மோசடி புகார்: காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றச்சாட்டு


மின்னணு வாக்கு எந்திரம் பற்றிய மோசடி புகார்: காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Jan 2019 10:30 PM GMT (Updated: 22 Jan 2019 9:02 PM GMT)

மின்னணு வாக்கு எந்திரம் பற்றிய மோசடி புகார் தொடர்பாக, காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

புதுடெல்லி,

மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்று லண்டனில் இருந்து இணையவழியில் அமெரிக்க வாழ் இந்திய மின்னணு தொழில் நுட்ப வல்லுனர் சையது சுஜா என்பவர் பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு பாரதீய ஜனதா கட்சி பதில் அளித்துள்ளது.

அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் புகார் கூறிய நபரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆஷிஸ் ராய் தலைமையிலான இந்திய பத்திரிகையாளர் சங்கம் ஆகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவான பாட்டை அவர் பாடி உள்ளார். அவர் காங்கிரஸ் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கும் எழுதுகிறார். சமூக வலைத்தளங்களில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்கிறார். லண்டனில் ராகுல் காந்தியின் பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான். எனவே இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் நடந்த சதிதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story