உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது


உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2019 9:30 PM GMT (Updated: 22 Feb 2019 9:30 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மாணவர்கள் போல் நடித்து பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ,

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கடந்த 14-ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை நடந்து வருகிறது. இதில் சந்தேகப்படும் வகையில் இருப்போரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தியோபந்த் பகுதியில் மாணவர்களாக நடித்து பிற மாணவர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கும் பணியில் இருவர் ஈடுபட்டு உள்ளதாக மாநில பயங்கரவாத எதிர்ப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்த இருவரையும் கண்காணித்து வந்த அதிகாரிகள், நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் முறையே காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் அகமது தெலி, புலவாமா மாவட்டத்தை சேர்ந்த அகியுப் அகமது மாலிக் என்று தெரியவந்தது. 20 முதல் 25 வயது வரையிலான அவர்கள் எந்த கல்வி நிறுவனத்திலும் சேராமலேயே கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் போல சுற்றி வந்துள்ளனர்.

காஷ்மீரில் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த இவர்கள், தங்கள் இயக்கத்துக்கு ஆள் சேர்க்க மாணவர்களிடம் மூளை சலவையில் ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் விசாரணைக்காக லக்னோ கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பை உறுதி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

காஷ்மீரை சேர்ந்த அந்த பயங்கரவாதிகள் இருவரும் எப்போது உத்தரபிரதேசத்துக்கு வந்தனர்? அவர்களுடன் வேறு யாராவது வந்தனரா? எத்தனை பேரை அவர்கள் தங்கள் இயக்கத்தில் இணைத்தனர்? ஆட்களை இணைத்தபின் அவர்களது திட்டம் என்ன? இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது? போன்றவை குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பயங்கரவாதிகளுக்கும், காஷ்மீர் தாக்குதலுக்கும் தொடர்பு உண்டா? என போலீசாரிடம் கேட்டபோது, அது குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது எனவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறினர். இந்த கைது நடவடிக்கைக்கு காஷ்மீர் போலீசார் உதவியதாகவும் உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர்.


Next Story