காஷ்மீர் அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை - நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு தகவல்


காஷ்மீர் அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை - நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:00 PM GMT (Updated: 15 Nov 2019 9:28 PM GMT)

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருவதாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில், உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், அதன் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஆனந்த் சர்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், நிலைக்குழு உறுப்பினர்களான எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா மற்றும் அவருடைய அதிகாரிகள் குழு பங்கேற்றது.

அப்போது, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும், இயல்புநிலை திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எம்.பி.க்கள் கேட்டனர். அதற்கு உள்துறை செயலாளர், “காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் வர்த்தகம் நடந்து வருகிறது” என்று கூறினார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் குறித்து எம்.பி.க்கள் கேட்டதற்கு, “அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். மீதி உள்ள தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று கால நிர்ணயம் செய்ய முடியாது. பொது பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்கள், அதற்குரிய தீர்ப்பாயத்தில் முறையிட வேண்டும். அதன் தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் ஐகோர்ட்டை அணுகலாம்” என்று உள்துறை அதிகாரிகள் கூறினர்.

காஷ்மீரில் இணையதள சேவைக்கு தடை விதித்தது குறித்தும் எம்.பி.க்கள் கேட்டனர். அதற்கு அதிகாரிகள், “பயங்கரவாதிகள் தங்கள் நாசவேலைக்கும், சமூக விரோதிகள் வதந்தி பரப்பவும் இணையதளத்தை பயன்படுத்துவதால், அதன் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது” என்று பதில் அளித்தனர்.

கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து இதுவரை காஷ்மீரில் 71 ஆயிரம் பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 14 ஆயிரம் பொதுமக்களும், 3 ஆயிரத்து 293 பாதுகாப்பு படையினரும், 22 ஆயிரத்து 552 பயங்கரவாதிகளும் பலியாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story