சென்னை, திருவள்ளூருக்கு குழாய் வழி கியாஸ் வினியோகம்: அதானி நிறுவன வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சென்னை, திருவள்ளூருக்கு குழாய் வழி கியாஸ் வினியோகம்: அதானி நிறுவன வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Feb 2020 9:15 PM GMT (Updated: 23 Feb 2020 8:21 PM GMT)

சென்னை, திருவள்ளூருக்கு குழாய் வழி கியாஸ் வினியோகம் செய்வது தொடர்பான, அதானி நிறுவன வழக்கினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு குழாய் வழியாக சமையல் கியாஸ் வினியோகிக்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (பி.என்.ஜி.ஆர்.பி.) உரிமை வழங்கியது. இதன்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டோரண்ட் கியாஸ் நிறுவனத்துக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.கே.என்.ஹரியானா நிறுவனத்துக்கும் குழாய் வழியாக கியாஸ் வினியோகிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து அதானி நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது.

முடிவில், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு குழாய் வழி கியாஸ் வினியோக உரிமை வழங்கப்பட்டதில், இயற்கை நீதி மீறப்பட்டதாக அதானி நிறுவனம் வைத்த வாதத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என கூறி, அதானி நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story