இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு: 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு: 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 May 2020 11:30 PM GMT (Updated: 18 May 2020 10:30 PM GMT)

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா 24 மணி நேரத்தில் 5,242 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

புதுடெல்லி, 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகள் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கொரோனா தனக்கு எதிராக போடப்படும் அத்தனை தடைகளையும் தகர்த்து எறிந்துவிட்டு, பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்த வகையில் 24 மணி நேரத்துக்குள் 5,242 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் காட்டுகிறது. இது இந்தியாவில் இதுவரை ஏற்படாத பாதிப்பு ஆகும். நேற்று முன்தினம் 4,987 பேர் பாதிக்கப்பட்டதே அதிகம் என்று இருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை நேற்றைய பாதிப்பு முறியடித்தது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பு 96,169 ஆக அதிகரித்துள்ளது.

இதே 24 மணி நேரத்துக்குள் கொரோனா புதிதாக 157 பேரை உயிரிழக்கவும் செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,029 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2,715 பேர் ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் 36,824 ஆக அதிகரித்துள்ளது. 56,316 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா 3-ல் ஒரு பங்கு பாதிப்பை மராட்டிய மாநிலத்தில்தான் ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 96 ஆயிரம் பேரில் 33 ஆயிரம் பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். இதேபோல் பலியான 3 ஆயிரம் பேரில் 1,100-க்கும் அதிகமானவர்கள் இந்த மாநிலத்தில் வசித்தவர்கள்தான்.

தமிழகம் மற்றும் குஜராத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தையும், ராஜஸ்தானில் 5 ஆயிரத்தையும் கடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 4,259 பேரையும், மேற்குவங்காளத்தில் 2,677 பேரையும், ஆந்திராவில் 2,407 பேரையும், பஞ்சாபில் 1,964 பேரையும், தெலுங்கானாவில் 1,551 பேரையும், பீகாரில் 1,262 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 1,183 பேரையும், கர்நாடகாவில் 1,147 பேரையும், அரியானாவில் 910 பேரையும், ஒடிசாவில் 828 பேரையும், கேரளாவில் 601 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 250-க்கும் கீழே உள்ளது.

கொரோனாவால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்ட மராட்டிய மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் குஜராத் இருக்கிறது. அங்கு இந்த வைரஸ் 659 பேரின் உயிரை காவு வாங்கி உள்ளது. மத்திய பிரதேசத்தில் 248 பேரும், மேற்குவங்காளத்தில் 238 பேரும், டெல்லியில் 160 பேரும், ராஜஸ்தானில் 131 பேரும், உத்தரபிரதேசத்தில் 104 பேரும், தமிழகத்தில் 81 பேரும், ஆந்திராவில் 50 பேரும், கர்நாடகாவில் 37 பேரும், பஞ்சாபில் 35 பேரும், தெலுங்கானாவில் 34 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

அரியானாவில் 14 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 13 பேரையும், பீகாரில் 8 பேரையும், ஒடிசா மற்றும் கேரளாவில் தலா 4 பேரையும், ஜார்கண்ட், சண்டிகர் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 3 பேரையும், அசாமில் 2 பேரையும், உத்தரகாண்ட், மேகாலயா மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

Next Story