மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனையை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தல்


மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனையை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2021 9:03 PM GMT (Updated: 3 May 2021 9:03 PM GMT)

மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த வேண்டும் மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியுள்ளார்.

பாரிசோதனை குறைவு

மராட்டியத்தை கொரோனா பாதிப்பு ஆட்டி படைத்து வருகிறது. இதில் தலைநகரான மும்பையில் சமீப நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதேபோல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல் நேற்று கூறியதாவது:-

மக்களுக்கு வேண்டுகோள்

மும்பையில் முன்பு ஒரு நாள் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையின் அளவு 50 ஆயிரமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இந்த எண்ணிக்கை 38 ஆயிரமாகவும், மே 2-ந் தேதி 28 ஆயிரமாகவும் குறைந்துள்ளது. வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். கொரோனா ஒருநாள் சோதனை எண்ணிக்கையை நாம் 40 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும். இந்த சோதனைக்கு முன்வருமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

தொற்றுநோயின் முதல் அலையின் போது கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் கடந்த பிப்ரவரி 10-ந் தேதி வரை மும்பையில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு 24 ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது அலையின்போது பரிசோதனை இருமடங்காக அதிகரிக்கப்பட்டது. ஒருநாளைக்கு பரிசோதனை எண்ணிக்கை 56 ஆயிரம் வரை சென்றது. ஏப்ரல் மாத்தில் எங்கள் சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 44 ஆயிரம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story