மத்தியபிரதேசத்தில் பாகிஸ்தானிய இந்து அகதிகள் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Jun 2021 2:55 AM GMT (Updated: 14 Jun 2021 2:55 AM GMT)

மத்தியபிரதேசத்தில் பாகிஸ்தானிய இந்து அகதிகள் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தூர், 

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்து சிந்தி சமூக மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், அங்குள்ள சிந்தி காலனி பகுதியில் வசிக்கின்றனர். அந்த சமூகத்தின் பிரதிநிதிகள், தங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானிய அகதிகள், தங்களின் பாஸ்போர்ட்டை அடையாள அட்டையாகக் காட்டி, இந்தூர் நகர கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

‘வயது வந்த அனைவருக்கும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறோம். கடந்த மாதம், இந்தூருக்கு வந்திருந்த ஒரு நெதர்லாந்து நாட்டவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது’ என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

மத்தியபிரதேசத்தில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தூர் மாவட்டத்தில் இதுவரை 1.52 லட்சம் பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆயிரத்து 370 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தூர் மாவட்டத்தில் சுமார் 13.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 2.35 லட்சம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்று முழு பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story