பிரதமர் மோடி தலைமையில் காஷ்மீர் தலைவர்களுடன் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் நடத்துவது, மாநில அந்தஸ்து குறித்து காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என காஷ்மீரின் முக்கிய கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் 2019 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முந்தையை நிலையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார். இந்த கோரிக்கைகளும் இன்றைய ஆலோசனையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story