கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:45 PM GMT)

கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு:

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் நன்கு மழை பெய்து, அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. தற்போது அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிவடைந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் அதன்பிறகு மழை பெய்யாததால் அணைகளுக்கு வரும் நீர் குறைந்தது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காைல நிலவரப்படி 101.22 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு வினாடிக்கு 2,962 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,491 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட அணையில், நேற்று காலை நிலவரப்படி 2,276.51 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,655 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2,490 கனஅடி தண்ணீர் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story