நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..! ராஜஸ்தானில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பா.ஜ.க.


நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..! ராஜஸ்தானில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பா.ஜ.க.
x

உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கம் என மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. இதற்காக புதிய திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருக்கிறது. எதிர்க்கட்சியான பாஜக, ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கம் என மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பெண்கள், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:-

ராஜஸ்தானில் பாஜக ஆட்சியமைத்தால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும்.

பாஜக ஆட்சியமைத்தால் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையம் மற்றும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிர் புகார்களுக்கான தனி பிரிவு அமைக்கப்படும். ஒவ்வொரு நகரத்திலும் ரோமியோ எதிர்ப்புப் படை அமைக்கப்படும்.

பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் ரூ.2 லட்சம் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Next Story