குஜராத் உச்சி மாநாட்டில் ரூ.26.33 லட்சம் கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து - பூபேந்திர பட்டேல் தகவல்


குஜராத் உச்சி மாநாட்டில் ரூ.26.33 லட்சம் கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து - பூபேந்திர பட்டேல் தகவல்
x

Image Courtesy : @Bhupendrapbjp

2022-ல் நடைபெற்ற உச்சி மாநாட்டில், ரூ.18.87 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 'துடிப்பான குஜராத்' 10-வது உச்சி மாநாடு இன்று( ஜன.10) பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், டிமோ-லெஸ்டே நாட்டின் அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா உள்ளிட்ட உலக தலைவர்களும், சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் 10-வது 'துடிப்பான குஜராத்' உச்சி மாநாட்டில் ரூ.26.33 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், 'துடிப்பான குஜராத்' உச்சி மாநாடு-2024 ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 'துடிப்பான குஜராத்' உச்சி மாநாட்டில், 57 ஆயிரத்து 241 திட்டங்களுக்கு ரூ.18.87 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 2024-ல் நடைபெற்ற 'துடிப்பான குஜராத்' உச்சிமாநாட்டின் 10-வது பதிப்பில், ரூ.26.33 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 41 ஆயிரத்துக் 299 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதன்மூலம், மொத்தம் 98,540 திட்டங்களுக்கு ரூ.45 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு குஜராத் வரலாற்று சாதனை படைத்துள்ளது."

இவ்வாறு பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளார்.


Next Story