ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

File image

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு தொடர்பு குறித்து கண்டறியப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியான பாதுகாப்புப்படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். நேற்று இரவு முழுவதும் தொடர்ந்த இந்த துப்பாக்கி சூட்டில் இன்று காலை வரை நீட்டித்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு தொடர்பு குறித்து கண்டறியப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Next Story