நெல்லூருக்கு 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல்..!


நெல்லூருக்கு 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல்..!
x

கடந்த 6 மணி நேரத்தில் மிக்ஜம் புயல், 11 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

நெல்லூர்,

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் நேற்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது இன்று (டிச.5) ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து படிப்படியாக நகரத் தொடங்கிய மிக்ஜம் புயல், தற்போது நெல்லூர் கடற்கரையை நெருங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லூருக்கு 30 கி.மீ. கிழக்கு - வட கிழக்கே மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 6 மணி நேரத்தில் மிக்ஜம் புயல், 11 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண முடிந்தது. இடைவிடாது பெய்த மழையால் சென்னையே தத்தளித்தது. தற்போது சென்னையில் காற்று, மழை குறைந்துள்ளது.



Next Story