இஸ்ரேலுக்கு புனித பயணம்: கேரளாவில் இருந்து சென்ற 5 பெண்கள் மாயம்


இஸ்ரேலுக்கு புனித பயணம்: கேரளாவில் இருந்து சென்ற 5 பெண்கள் மாயம்
x

கோப்புப்படம்

கேரளாவில் இருந்து இஸ்ரேலுக்கு புனித பயணம் சென்ற 5 பெண்கள் மாயமாகி உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நாலாஞ்சிரா என்ற பகுதியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தலைமையில் கடந்த 8-ந் தேதி 26 பேர் அடங்கிய குழுவினர் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு புனித பயணம் சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சி செய்து இருந்தது. அந்த குழு கடந்த 14-ந் தேதி இஸ்ரேலை அடைந்தது. என்கிரேம் என்ற சுற்றுலா மையத்தில் புனித பயணம் சென்ற குழுவில் இருந்த 3 பேர் திடீரென மாயமானார்கள்.

மறுநாள் பெத்லகேமில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து மேலும் 3 பேர் மாயமானார்கள். இவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். இது குறித்து இஸ்ரேல் நாட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஓட்டலுக்கு வந்து மாயமானவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். அதைத்தொடர்ந்து புனித பயணம் சென்ற குழுவினர் கேரளா திரும்பினர். இந்த நிலையில் நாலாஞ்சிரா பாதிரியார் கேரள டி.ஜி.பி. அனில் காந்தை சந்தித்து மாயமானவர்கள் பற்றி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story