கால்பந்து விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு


கால்பந்து விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
x

தேர்வில் தேர்ச்சி பெறும்வரை கால்பந்து விளையாடுவதற்கு செல்ல கூடாது என்று தந்தை எச்சரித்தார்.

தார்வார்,

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் சாதனகெரே படாவனேயை சேர்ந்தவர் சரணப்பா கொட்டிஹாலா. இவரது மகன் சேத்தன் (வயது 23). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் சேத்தனுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது. தினமும் மாலை நேரத்தில் கால்பந்து விளையாடுவதற்காக சென்றுவிடுவார். இதனால் தந்தை சரணப்பா கொட்டிஹாலா, சேத்தனை கண்டித்துள்ளார். கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறும்வரை கால்பந்து விளையாடுவதற்கு செல்ல கூடாது என்று எச்சரித்தார்.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சேத்தன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சேத்தனை தேடி பார்த்தனர். மேலும் நண்பர்களிடமும் விசாரித்து பார்த்தனர். ஆனால் சேத்தன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சரணப்பா கொட்டிஹாலா தார்வார் புறநகர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சேத்தனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை கெலகெரே ஏரியில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தார்வார் புறநகர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அது மாயமானதாக தேடப்பட்ட கால்பந்து வீரர் சேத்தன் என்பது தெரியவந்தது. மேலும் தந்தை திட்டியதால் சேத்தன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் அளித்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story