டெல்லியில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்... 'இந்தியா' கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை...!


டெல்லியில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்... இந்தியா கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை...!
x

Image Credits : ANI News

முதல்-அமைச்சர் இன்று மாலை 3 மணிக்கு 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையே, மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றிருந்தார். ஏற்கனவே, அவர் மழை வெள்ள நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார். கோவையில் இருந்தபோது, அதற்கான அனுமதி கிடைத்ததால், அங்கிருந்தே விமானம் மூலம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ள முதல்-அமைச்சர் இன்று மாலை 3 மணிக்கு 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோருவதுடன் மத்திய குழுவை பார்வையிட அனுப்பிவைக்குமாறும் வலியுறுத்த உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவரை பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இன்று மாலை 3 மணிக்கு 'இந்தியா' கூட்டணியின் 4-வது கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இருவரும் அதுகுறித்து ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story