'நீட்' தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் தமிழ்நாட்டுக்கு 3-வது இடம்..!!


நீட் தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் தமிழ்நாட்டுக்கு 3-வது இடம்..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Aug 2023 12:22 AM GMT (Updated: 21 Aug 2023 6:49 AM GMT)

மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாநில பாடத்திட்ட மாணவர்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

புதுடெல்லி,

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ந் தேதி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 499 நகரங்களில் 4 ஆயிரத்து 97 மையங்களில் நடந்தது. தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தியது.

இதுதொடர்பான புதிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை இத்தேர்வை எழுதிய மாணவர்களில் அதிகம் பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். இந்த ஆண்டு, 5 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மேற்பட்ட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

மராட்டியம் முதலிடம்

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களிடையே மராட்டிய மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் அதிகம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக அவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

அதையடுத்து, கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அடுத்ததாக, உத்தரபிரதேச மாநில பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். கேரளா, பீகார் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

திரிபுராவில் குறைவு

திரிபுரா மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வு எழுதியவர்கள்தான் மிகவும் குறைவு. வெறும் 1,683 பேர்தான் அத்தேர்வை எழுதினர்.

மிசோரம் (1,844 பேர்), மேகாலயா (2,300 பேர்), நாகாலாந்து (2,422 பேர்), கோவா (3,834 பேர்), உத்தரகாண்ட் (4,423 பேர்) மாநில பாடத்திட்டங்களில் படித்தவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் நீட் தேர்வு எழுதினர். கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது.

முதல் 10 இடங்களில் தமிழ்நாடு

இந்த ஆண்டு தேர்வு எழுதிய மொத்தம் 20 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களில், 11 லட்சத்து 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த 1 லட்சத்து 39 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மராட்டியம் (1 லட்சத்து 31 ஆயிரம் பேர்), ராஜஸ்தான் (1 லட்சத்துக்கு மேல்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த தலா 75 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகம் பேர் தேர்ச்சி பெற்ற முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 மாணவர்களில் 8 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். 7 பேர் ராஜஸ்தானையும், 6 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர்.


Next Story