இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு


இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு
x
தினத்தந்தி 13 Oct 2023 3:51 AM GMT (Updated: 13 Oct 2023 5:07 AM GMT)

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.

இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, டெல்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானம் மூலம் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்.

இதனை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்டு டெல்லி வந்த 212 இந்தியர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரை சென்னை, கோவை அழைத்து வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளால் 14 பயணிகள் சென்னைக்கும், கோவைக்கு 7 பேரும் இன்று பிற்பகல் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.


Next Story