அமலாக்கத்துறையால் கைது: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் இன்று முறையீடு


அமலாக்கத்துறையால் கைது: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் இன்று முறையீடு
x

மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் இன்று முறையிட உள்ளனர்.

புதுடெல்லி,

அமலாக்கத்துறை கைது செய்தது சரியே என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வக்கீ்ல்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) முறையிடுகின்றனர்.

செந்தில் பாலாஜி

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனையடுத்து 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது என்று தீர்ப்பு அளித்தார்.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த மனுவில் 'ஐகோர்ட்டு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கடந்த 14-ந்தேதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத் துறைக்கு தடை விதித்து, சட்டவிரோத காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக விசாரிக்க...

இதற்கிடையே இந்த மேல்முறையீட்டு மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தரப்பு வக்கீல்கள் இன்று முறையிடவுள்ளனர்.

அதேசமயம் மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அளித்த தீர்ப்பில் தங்களுக்கு எதிராக உள்ள அம்சங்களை குறிப்பிட்டு அமலாக்கத் துறை சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு 24-ந் தேதி விசாரிக்கிறது.


Next Story