ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் தரமான கல்வி, மருத்துவம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்


ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் தரமான கல்வி, மருத்துவம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்
x

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

பா.ஜனதா ஆளும் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று குஜராத் சென்றார். இம்மாதத்திலேயே 4-வது தடவையாக அவர் அங்கு சென்றார். அவருடன் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவும் சென்றார்.

ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், டெல்லியில் உள்ளதுபோல், தரமான, இலவச கல்வி அளிக்கப்படும். அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். ஆசிரியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும். உடனுக்குடன் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தனியார் பள்ளிகள் சட்டவிரோதமாக கட்டணத்தை உயர்த்தவிட மாட்டோம்.

தரமான மருத்துவமும் இலவசமாக அளிக்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக மாற்றப்படும். சிகிச்சை, மருந்துகள், அறுவை சிகிச்சை, பரிசோதனை என அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும். டெல்லியில் இருப்பதுபோல், கிராம, வட்ட அளவில் 'மொகல்லா' கிளினிக்குகள் நிறுவப்படும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story