வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது
x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் பெங்களூரு நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் பெங்களூரு நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.2.86 கோடிக்கு சொத்து

பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் அலுவலகத்தில் நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் சீனிவாச மூர்த்தி. இவர், பெங்களூரு ஆந்திரஹள்ளியில் வசித்து வருகிறார். அதிகாரி சீனிவாச மூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

அப்போது அவருக்கு பெங்களூரு, ராய்ச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைகள், வீடுகள் மற்றும் 5 மதுபான விடுதிகள் இருந்தது தெரியவந்தது. அதுதொடர்பான ஆவணங்களும் போலீசாருக்கு கிடைத்தது. அந்த ஆவணங்களை போலீசார் பரிசீலனை நடத்தினார்கள். அப்போது சீனிவாச மூர்த்திக்கு வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.86 கோடிக்கு சொத்து இருப்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து, அதிகாரி சீனிவாச மூர்த்தி மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது உறுதியானதை தொடர்ந்து அதிகாரி சீனிவாச மூர்த்தியை லோக் அயுக்தா போலீசார் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் வைத்து கைது செய்தார்கள்.

பின்னர் அவர், லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சீனிவாச மூர்த்தியை 5 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து அதிகாரி சீனிவாச மூர்த்தியிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story