உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை


தினத்தந்தி 15 April 2023 7:37 PM GMT (Updated: 15 April 2023 7:37 PM GMT)

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.

இந்த சூழலில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனிடையே உமேஷ் பால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் போலீசார் முன்னிலையில் மர்ம கும்பல் ஒன்று ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. மருத்துவ பரிசோதனைக்காக இருவரையும் போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சுட்டுவிட்டு தப்பிய 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக போலி என்கவுன்டரில் நாங்கள் கொல்லப்படுவோம் என்று அஞ்சுவதாகக் கூறி ஆதிக் அகமது சுப்ரிம் கோர்டை அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story