காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் கையை இழந்த கொடுமை


காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் கையை இழந்த கொடுமை
x

image credit: free press journal

தினத்தந்தி 30 Sep 2022 9:09 AM GMT (Updated: 30 Sep 2022 9:16 AM GMT)

பீகாரில் காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் ஒருவர் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி காது அறுவை சிகிச்சைக்கு வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமனியில் ஊசி போடப்பட்டது. இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்தது.

ரேகா உடனடியாக கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தார், ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனம் செலுத்தவில்லை.

மாறாக அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மிரட்டினர். தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை அவர் இழந்தார். கையை இழந்தது மட்டுமின்றி, நவம்பரில் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.

இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் கன்கர்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் துறை இதனை வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவர்கள் தற்போது நியாயம் கேட்டு கோர்ட்டிற்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம்குறித்து அவரது வழக்கறிஞர் ரூபம் கூறுகையில், "இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள்.

மருத்துவ அலட்சியத்தால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன், அவரது கையும் துண்டாகியுள்ளது. இதற்காக, நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நோயாளிக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அந்த வழக்கிறிஞர் தெரிவித்தார்.


Next Story