'மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பா.ஜ.க. நன்கொடை வசூலிக்கிறது' - காங்கிரஸ் குற்றச்சாட்டு


மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பா.ஜ.க. நன்கொடை வசூலிக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பிறகு, பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தி, அதன் மூலம் பா.ஜ.க.விற்கு நன்கொடை வசூலிப்பதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையே பா.ஜ.க.வுக்கு மொத்தம் ரூ.335 கோடி நன்கொடையாக வழங்கிய சுமார் 30 நிறுவனங்கள், அதே காலகட்டத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பா.ஜ.க. தனது நிதி ஆதாரங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் இந்த சந்தேகத்திற்குரிய நன்கொடைகள் குறித்த விசாரணைக்கு உடன்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

"அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்ட பிறகு, பல தனியார் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது, மத்திய புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம், தன்னாட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த 3 புலனாய்வு அமைப்புகளில் 2 அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

பா.ஜ.க. அரசாங்கத்தால் புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முழு தேசத்திற்கும் தெரியும். 2014-ம் ஆண்டிலிருந்து அரசியல்வாதிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. இதில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன.

பா.ஜ.க.வுக்கு மொத்தம் ரூ.187.58 கோடி வழங்கிய 30 நிறுவனங்களில், 23 நிறுவனங்கள், 2014 முதல் சோதனை நடந்த ஆண்டு வரை பா.ஜ.க.வுக்கு எந்த நன்கொடையும் வழங்கியிருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு நன்கொடை வழங்கியுள்ளன. ஏற்கனவே நன்கொடை வழங்கி வந்த நிறுவனங்கள், சோதனைக்குப் பிறகு அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன.

விசாரணை அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிரோதமானது என நாங்கள் கூறவில்லை. ஆனால், விசாரணையை எதிர்கொண்ட பின்னர் இந்த நிறுவனங்கள் ஏன் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்குகின்றன என்பது விசாரிக்கப்பட வேண்டிய விவகாரமாகும்.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளிப்பது வெறும் தற்செயலானதா? இந்த விவகாரத்தை நாங்கள் நீதித்துறையிடமும், மக்களிடமும் கொண்டு செல்வோம். இரண்டு இடங்களிலும் உங்களை தோற்கடிப்போம்."

இவ்வாறு கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Next Story