"கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும்" - மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல்


கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும் - மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல்
x
தினத்தந்தி 5 March 2024 10:18 AM GMT (Updated: 5 March 2024 10:21 AM GMT)

இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் பிரபலமான ஓட்டல் என்பதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதனிடையே, இந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். உணவக ஊழியர்களும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பில் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் ஓட்டலில் சேதம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேக நபர் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

"மங்களூர் குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை. குண்டுவெடிப்பு சம்பவம் இன்னும் விசாரணையில் உள்ளது. அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

இதையடுத்து இன்று சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலும் குண்டு வெடிக்கும் என கர்நாடக முதல்-மந்திரி, உள்துறை மந்திரி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மின்னஞ்சலில், "வருகிற சனிக்கிழமை மதியம் 2.48 மணிக்கு பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள் மற்றும் பேருந்துகள், ரெயில்களில் வெடிகுண்டு வெடிக்கும். குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும்" என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பெங்களூரு உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்த நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.


Next Story