சண்டிகார் மாநகராட்சி: மூத்த துணை மேயர், துணை மேயர் மறுதேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி


சண்டிகார் மாநகராட்சி: மூத்த துணை மேயர், துணை மேயர் மறுதேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி
x
தினத்தந்தி 4 March 2024 8:44 AM GMT (Updated: 4 March 2024 9:44 AM GMT)

கடந்த 19ம் தேதி 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

சண்டிகார்

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த ஜனவரி 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார். அதன்பின் மேயர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டார். ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

சண்டிகார் மாநகராட்சியில் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறுதேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் குல்ஜீத் சிங் சந்துவும், காங்கிரஸ் சார்பில் குர்பிரீத் காபியும் மூத்த துணை மேயர் பதவிக்கு போட்டியிட்டனர்.

மேலும் பா.ஜ.க. சார்பில் ராஜிந்தர் சர்மாவும், காங்கிரஸ் சார்பில் நிர்மலா தேவியும் துணை மேயர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இந்நிலையில், 35 உறுப்பினர்களை கொண்ட மாநராட்சியில் பா.ஜனதா வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதேபோல, பா.ஜனதா வேட்பாளர் ராஜிந்தர் சர்மாவும் அதே வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மூத்த துணை மேயர் பதவிக்கான தேர்தலில், ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக பா.ஜ.க.வில் 17 கவுன்சிலர்கள் இருந்தனர். ஆனால் கடந்த 19ம் தேதி 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் தற்போது ஆம் ஆத்மிக்கு 10 உறுப்பினர்களும், காங்கிரஸ்க்கு ஏழு உறுப்பினர்களும் உள்ளன. ஷிரோமணி அகாளி தளத்திற்கு ஒரு கவுன்சிலர் இடம் உள்ளது.


Next Story