மிக்ஜம் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்


மிக்ஜம் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
x

சென்னையை புரட்டிப்போட்ட ‘மிக்ஜம்’ புயல் ஆந்திராவில் கடந்த 5-ம் தேதி கரையை கடந்தது.

அமராவதி,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் பல பகுதிகளில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. மழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதந்தன. இன்னமும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

மீட்பு பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். சென்னையை புரட்டிப்போட்ட 'மிக்ஜம்' புயல் ஆந்திராவில் கடந்த 5-ம் தேதி கரையை கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்னதாக பெய்த கனமழையால் ஆந்திராவின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தன.

இந்த நிலையில், மிக்ஜம் புயலால் ஏற்பட்ட அழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மிக்ஜம் புயலின் தாக்கம் ஆந்திராவில் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலமான தமிழகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து, புயலை தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்புமாறு பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 770 கிமீ சாலைகள் சேதம் மற்றும் குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பிற வசதிகளில் கணிசமான பாதிப்புகளுடன் ரூ.10 ஆயிரம் கோடி வரை பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பேரிடரை தேசிய பேரிடராக அங்கீகரிப்பது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு தேவையான உத்வேகத்தை வழங்கும், நீடித்த மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பை நிறுவும் என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story