சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் கட்சியின் உத்தரவாதம்: ஜெய்ராம் ரமேஷ்


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் கட்சியின் உத்தரவாதம்:  ஜெய்ராம் ரமேஷ்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 12 March 2024 9:48 PM GMT (Updated: 12 March 2024 11:28 PM GMT)

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை, ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நேற்று மராட்டிய மாநிலம் நந்துர்பாரில் இருந்து தொடங்கியது.

இதையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், நந்துர்பாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி தனது யாத்திரையின்போது 3 உத்தரவாதங்களை அளித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை. இளைஞர்களுக்கு 5 வாக்குறுதிகள். சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக உத்தரவாதம் அளித்துள்ளோம். அது, பல்ேவறு சாதிகளின் மக்கள்தொகையையும், நாட்டின் வளங்களில் அவர்கள் பெற்றுள்ள பங்கையும் காட்டும் எக்ஸ்ரே ஆகும். நாங்கள் நடத்தும் யாத்திரை, அரசியல் பேரணிதான். ஆனால், இது தேர்தல் பிரசாரத்தின் ஒரு அங்கம் அல்ல. காங்கிரஸ் கட்சி, அரசியல் கட்சிதான், சாமியார்கள் கூடம் அல்ல. சில தேர்தல்களில் வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம்.

ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் சமூகத்தை பிளவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடுவது இல்லை. அந்த அமைப்புகளின் கொள்கைகள் அனைத்தும் பிரிவினையாக உள்ளன. பிரதமர் மோடியின் அணுகுமுறையும், கொள்கைகளும் அப்படித்தான் உள்ளன. சமூகத்தை பிளவுபடுத்துவதை வேகப்படுத்துவதில்தான் குறியாக இருக்கின்றனர். ராகுல்காந்தி யாத்திரை 59 நாட்களை நிறைவு செய்துள்ளது. வருகிற 17-ந்தேதி, மும்பையில் யாத்திரை நிறைவடையும். அதே நாள் இரவு, மும்பை சிவாஜி பூங்காவில் 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும்" என்று அவர் கூறினார்.


Next Story