மகாசிவராத்திரி விழாவின்போது இருதரப்பினர் இடையே மோதல்: தடுக்கச்சென்ற போலீஸ்காரர் குத்திக்கொலை


மகாசிவராத்திரி விழாவின்போது இருதரப்பினர் இடையே மோதல்: தடுக்கச்சென்ற போலீஸ்காரர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 9 March 2024 7:44 AM GMT (Updated: 9 March 2024 7:46 AM GMT)

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற போலீஸ்காரர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் இந்துமதப்பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி நேற்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கடவுள் சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து மகாசிவராத்திரியை கொண்டாடினர்.

அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவாம் லுதுனா கிராமத்தில் நேற்று இரவு மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அப்போது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரான கான்ஸ்டபிள் நிரஞ்சன் சிங் மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றார். அப்போது, கான்ஸ்டபிள் நிரஞ்சன் சிங்கின் கழுத்தில் யாரோ கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த கத்திக்குத்தில் படுகாயமடைந்த நிரஞ்சன் சிங் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். நிரஞ்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லுதுனா கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கான்ஸ்டபிளை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story