டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி


டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி
x
தினத்தந்தி 21 March 2024 3:56 PM GMT (Updated: 21 March 2024 4:30 PM GMT)

டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது.

ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை கைதுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், இன்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதனால், டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.ஆனால், வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை தற்போது அதிரடியாக கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால், நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் கைதுக்கு நாடு முழுவதும் கண்டங்கள் வலுத்து வருகிறது.


Next Story