கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத விமான பயணிகளை தடைப் பட்டியலில் சேர்க்க டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்


கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத விமான பயணிகளை தடைப் பட்டியலில் சேர்க்க டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்
x

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத விமான பயணிகளை தடைப் பட்டியலில் சேர்க்குமாறு டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஹரி ஷங்கர் சமீபமாக விமான பயணம் மேற்கொண்ட பொழுது கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து எழுப்பிய புகார் தொடர்பாக டெல்லி ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி விபின் சாங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா இன்னும் முழுமையாக முடிவிற்கு வராத நிலையில் விமானங்கள் போன்ற முழுவதும் மூடப்பட்ட இடங்கள் அல்லது அமைப்புகளில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது என்பது அவசியமாகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே இத்தகைய விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை விமான போக்குவரத்து இயக்குநரகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், இது சம்பந்தமாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுக்கு உரிய தகவல்களை வழங்கவேண்டும் என்றும், தேவைப்பட்டால் விதிமுறைகளை பின்பற்றாத பயணியை விமானத்தி இருந்தும் விமான நிலையத்தில் இருந்தும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பயணியின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும், 'நோ ஃப்ளை லிஸ்ட்' எனப்படும் விமான பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நபர்கள் பட்டியலில் சேர்க்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


Next Story