தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு; முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் சிறை தண்டனைக்கான தடை நீட்டிப்பு


தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு; முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் சிறை தண்டனைக்கான தடை நீட்டிப்பு
x

சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கான இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து அப்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த சம்பத்குமார் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை பதிவு செய்து அந்த பதில் மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுக்களில் உள்ள தகவல்கள் நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. அப்போது தண்டனைக்கு எதிராக சம்பத்குமார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

பின்னர் சம்பத் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி ஏ.ஸ்.ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பத்குமாரின் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் மே 3-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story