போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அறிவுரை


போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அறிவுரை
x

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி.

போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்று போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அறிவுரை வழங்கி உள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள நகர ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலையில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கலந்துகொண்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் பிரதாப் ரெட்டி பேசியதாவது:-

பெங்களூருவில் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போலீசார் பணியாற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது ஒவ்வொரு போலீசாரின் கடமை. குற்றங்கள் நடைபெறும் முன்பாக, அதனை தடுக்க போலீசார் முன்வர வேண்டும். குற்றங்களை தடுக்கும் விவகாரத்தில் எந்த ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும், போலீசார் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதில் போலீசார் தவறு செய்யக்கூடாது.

போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தால், தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதற்காக தான் போலீஸ் நிலையத்தை நாடி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுடன், போலீசார் நட்புடன் பழக வேண்டும். அவர்கள் அளிக்கும் புகார்களின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது. கொரோனா சந்தர்ப்பத்தில் தங்களது குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் போலீசார் சிறப்பாக பணியாற்றினாா்கள். அதுபோல், போலீசார் தங்களது பொறுப்பை உணர்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பிரதாப் ரெட்டி பேசினார்.


Next Story