மிசோரமில் ரூ.68.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது


மிசோரமில் ரூ.68.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
x

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கலால் மற்றும் போதைப்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஐஸ்வால்,

மிசோரமில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.68.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மிசோரம் மாநிலம் சியாஹா மாவட்டத்தில் உள்ள புல்புய் கிராமத்தில் கடந்த புதன்கிழமை, போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அசாம் ரைபிள்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 225 கிராம் அளவில் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 1.75 கோடி என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து சம்பை மாவட்டத்தில் உள்ள சோகாவ்தார்-மெல்புக் சாலையில் நடத்திய சோதனையில் 22.2 கிலோ எடையுள்ள 20 பாக்கெட் 'மெத்தாம்பேட்டமைன்'மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.66.66 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கலால் மற்றும் போதைப்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.


Next Story