ஆந்திராவில் இருவேறு இடங்களில் சாலை விபத்து: 5 பேர் பலியான சோகம்


ஆந்திராவில் இருவேறு இடங்களில் சாலை விபத்து: 5 பேர் பலியான சோகம்
x
தினத்தந்தி 4 April 2024 9:27 AM GMT (Updated: 4 April 2024 9:41 AM GMT)

இந்த வெவ்வேறு சாலை விபத்துகள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயவாடா,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் இன்று நடந்த இரு சாலை விபத்துகளில் வயதான தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலத்தில் உள்ள அக்கிரெட்டிபாலம் கிராமத்தில் லாரி மீது வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்தில் இறந்தவர்கள் கொவ்வூரு நகரை சேர்ந்த ஹனுமந்து ஆனந்த ராவ், ஹனுமந்து சேகர் ராவ், சிந்தடி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதேபோல மற்றோரு சாலை விபத்து, கிருஷ்ணா மாவட்டம் கன்டாசாலா மண்டலத்தில் உள்ள லங்காபள்ளி கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வயதான தம்பதி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த தாசரி நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது மனைவி சரோஜினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வெவ்வேறு சாலை விபத்துகள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story