25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல்: பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு


25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல்: பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 20 Nov 2022 2:12 PM GMT (Updated: 20 Nov 2022 2:20 PM GMT)

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமின்றி, 25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல் இது என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.



காந்திநகர்,


குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி, குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பிரசாரத்தில் இன்று ஈடுபட்டார்.

இதேபோன்று, பொடாட் பகுதியில் நடந்த பேரணியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பிரசாரத்தில் மக்கள் முன்பு பேசும்போது, இந்த தேர்தல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேர்தல் மட்டுமல்ல.

இந்த தேர்தல், 25 ஆண்டுகளுக்கு பின்பு குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தலாக இருக்கும் என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ள சூழலில், இந்த தேர்தலில் காங்கிரசுக்கு, புதிதாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி பெரும் சவாலாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.


Next Story