கெஜ்ரிவாலை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை - 10 நாட்கள் காவலில் எடுக்கக்கோரி மனு தாக்கல்


கெஜ்ரிவாலை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை - 10 நாட்கள் காவலில் எடுக்கக்கோரி மனு தாக்கல்
x
தினத்தந்தி 22 March 2024 9:35 AM GMT (Updated: 22 March 2024 10:42 AM GMT)

கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது ஆஜர்படுத்தியுள்ளனர். அமலாக்கத்துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்ற சிறிது நேரத்திலேயே கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மீண்டும் மனு தாக்கல் செய்வார் என அவரது தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.


Next Story