மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்


மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
x

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் மந்திரியாக இருந்த பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த மாதம் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியாக இருந்த பாபா சித்திக்கும் விலகினார்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். இதனைதொடர்ந்து தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மராட்டியத்தில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார் அசோக் சவான். 2014 முதல் 2019 வரை மராட்டிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். எனவே, காங்கிரஸில் இருந்து விலகிய அசோக் சவான், விரைவில் அவர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story