இஸ்ரேலில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் புறப்பட்டது நான்காவது விமானம்..!!


இஸ்ரேலில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் புறப்பட்டது நான்காவது விமானம்..!!
x

இஸ்ரேலில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் நான்காவது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.

புதுடெல்லி,

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன் தினம் காலை டெல்லி வந்தடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் நேற்று மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2வது மீட்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது. இதனையடுத்து இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறங்கியது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.

இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் நான்காவது விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story