வரும் மார்ச்சில் இருந்து குஜராத்தில் இலவச மின்சாரம்; பகவந்த் மான் பேட்டி


வரும் மார்ச்சில் இருந்து குஜராத்தில் இலவச மின்சாரம்; பகவந்த் மான் பேட்டி
x

குஜராத்தில் வரும் மார்ச்சில் இருந்து இலவச மின்சாரம் கிடைக்கும் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேட்டியில் கூறியுள்ளார்.



ஆமதாபாத்,


குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது.

குஜராத்தில் நாளை வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேசினார்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவர் அளித்த பேட்டியில், வடமேற்கு மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வருகிற மார்ச்சில் இருந்து இலவச மின்சாரம் கிடைக்கும்.

டெல்லியில் இலவச மின்சாரம் தருவோம் என நாங்கள் வாக்குறுதி அளித்தோம். அந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் அது எப்படி உங்களால் முடியும்? என கேட்டனர். ஆனால், நாங்கள் செய்தோம். பஞ்சாப்பிலும் இதே நிலைமைதான்.

குஜராத்திலும் நாங்கள் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறினார்.

எதிர்க்கட்சிகளை தாக்கும் வகையில் பேசிய அவர், நாங்கள் குஜராத்தில் ஆட்சி அமைப்போம். சிலர் எங்களை பார்த்து, நாங்கள் பா.ஜ.க.வின் பி அணி என்றும், வேறு சிலர் காங்கிரசின் பி அணி என்றும் எங்களை கூறி வருகின்றனர். ஆனால், நாங்கள் 130 கோடி மக்களின் ஏ அணி என்று அவர் கூறினார்.


Next Story