பெங்களூருவில் கஞ்சா சாக்லெட் விற்ற வாலிபர் சிக்கினார்


பெங்களூருவில் கஞ்சா சாக்லெட் விற்ற வாலிபர் சிக்கினார்
x

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சா சாக்லெட் கடத்தி வந்து விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சா சாக்லெட் கடத்தி வந்து விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

கஞ்சா சாக்லெட்டுகள் கடத்தல்

பெங்களூரு ஆர்.எம்.சி.யார்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள லாரிகள் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த ஆட்டோவை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த ஆட்டோவில் சாக்லேட் மூட்டைகள் இருந்தது. அதனை விற்பனைக்கு எடுத்து செல்வதாக ஆட்டோ டிரைவர் கூறினார். அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் சில மூட்டைகளில் கஞ்சா சாக்லெட் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் சமீம் அக்தர் என்று தெரிந்தது. இவருக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து கஞ்சா சாக்லெட்டுகள் ரெயில் மூலமாக பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரிலான சாக்லேட்டுகளில் கஞ்சா கலந்திருந்தது தெரியவந்தது.

3 பேருக்கு வலைவீச்சு

பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த கஞ்சா சாக்லெட்டுகளை சமீம் அக்தர் விற்று வந்துள்ளார். அதாவது 3 சாக்லேட்டுகளை ரூ.50-க்கு அவர் விற்றுள்ளார். சமீம் அக்தருடன் சேர்ந்து சஞ்சய், கோவிந்த், வினோத் ஆகிய 3 பேரும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்று வந்துள்ளனர். தற்போது அவர்கள் 3 பேரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

கைதான சமீம் அக்தரிடம் இருந்து 225 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா கலந்த சாக்லெட் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதான சமீம் அக்தர் மீது ஆர்.எம்.சி.யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story