நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட போகிறேன்: ராகுல் காந்தி


நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட போகிறேன்: ராகுல் காந்தி
x

தனது கேள்விகளுக்கு பிரதமரால் பதிலளிக்க முடியாது என்பதால், அவர் தன்னுடன் விவாதிக்க வரமாட்டார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி வெல்வதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-

அரசியலமைப்பை அழிப்பவர்களிடம் இருந்து அதை காப்பாற்றுவதே அனைவரின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காகவே ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ளோம். டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரசுக்கும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இதைப்போல ஆம் ஆத்மி தொண்டர்களும் 4 தொகுதிகளில் தங்கள் தலைவர்களுக்கும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும்.

பிரதமர் மோடி தனக்கு பிடித்தமான சில செய்தியாளர்களுக்கு இடைவிடாமல் பேட்டி கொடுக்கிறார். ஆனால் என்னுடன் விவாதிக்க அவர் வரமாட்டார். ஏனெனில் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்பது அவருக்கு தெரியும்.பிரதமர் என்னுடன் விவாதிக்க வரமாட்டார். ஆனால் நான் எழுப்பும் பிரச்சினைகளை பொதுக்கூட்டங்களில் மட்டும் பேசுவார். அதானி-அம்பானி குறித்து ஏன் பேசவில்லை என்று நான் கேட்ட உடனே, அது குறித்து பேசினார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிவீரர் திட்டத்தை குப்பைத்தொட்டியில் வீசுவோம். சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் ஜி.எஸ்.டி.யை எளிமையாக்குவோம்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


Next Story