மணிப்பூரை விட இஸ்ரேல் விவகாரத்தில் ஆர்வம் காட்டும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி தாக்கு


மணிப்பூரை விட இஸ்ரேல் விவகாரத்தில் ஆர்வம் காட்டும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி தாக்கு
x
தினத்தந்தி 16 Oct 2023 12:07 PM GMT (Updated: 16 Oct 2023 12:37 PM GMT)

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையை விட இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐஸ்வால்,

மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக மிசோரம் வந்தடைந்த ராகுல்காந்தி சன்மாரி சந்திப்பிலிருந்து அணிவகுப்பைத் தொடங்கி சுமார் 4.5 கி.மீ தூரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

அதன்பின்னர் ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பேரணியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிலையில் ராகுல்காந்தி பேசுகையில்,

ஜிஎஸ்டி சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அழிக்கவும் விவசாயிகளை பலவீனப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இது நமது நாட்டு பிரதமரின் அபத்தமான யோசனை. பொருளாதாரம் இன்னும் மீளவில்லை.

பிரதமரும், இந்திய அரசும் இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் காட்டும் ஆர்வத்தை, மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் சிறிதளவும் அக்கறை காட்டாதது எனக்கு வியப்பை தருகிறது.

மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். ஆனால், அங்கு பயணம் செய்வதை பிரதமர் முக்கியமாகக் கருதவில்லை.

இரு சமூகத்தினரிடையே மே மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லாதது வெட்கப்படவேண்டியதொன்றாகும் என்றார்.


Next Story