இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை குறைப்பு.. நிதிஷ் குமார் அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம்


இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை குறைப்பு..  நிதிஷ் குமார் அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம்
x

ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு தலா மூன்று நாட்கள் விடுமுறையும், முஹரம் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

பாட்னா:

நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசாங்கம், இந்து பண்டிகை காலங்களில் மாநில பள்ளிகளுக்கான விடுமுறையை குறைக்க முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை காலண்டரை பீகார் கல்வித் துறை நேற்று வெளியிட்டது. அதில் குறைவான விடுமுறை நாட்களே இருந்தன. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 220 கற்பித்தல் நாட்களை உறுதி செய்யும் வகையில் இந்த காலண்டர் உருவாக்கப்பட்டதாக கல்வித்துறை கூறியுள்ளது.

ஜென்மாஷ்டமி, ரக்சாபந்தன், ராமநவமி, சிவராத்திரி, தீஜ், வசந்த பஞ்சமி மற்றும் ஜிவித்புத்ரிகா ஆகிய இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை ரத்து செய்ய உள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது. அதேசமயம் இஸ்லாமிய பண்டிகைகளான, ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு தலா மூன்று நாட்கள் விடுமுறையும், முஹரம் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனால் பீகார் அரசு மீது இந்துக்கள் மற்றும் பாஜகவினரின் கோபம் திரும்பியிருக்கிறது. இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்து, முஸ்லிம் பண்டிகைகளுக்கான விடுமுறையை அதிகரித்து வருவதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பீகார் அரசின் இந்த முடிவை கண்டித்து, பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான அஷ்வினி சவுபே தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ளார். அதில், நிதிஷ் குமாரை திருப்திப்படுத்தும் தலைவர் என்று சவுபே குறிப்பிட்டுள்ளார்.

மகா கூட்டணியின் இந்துக்களுக்கு எதிரான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என்றும், பீகார் அரசு ஓட்டு வங்கிக்காக சனாதன தர்மத்தை வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கும் நிதிஷ் குமார் அரசாங்கத்தை கடுமையாக சாடியிருக்கிறார்.

"நிதிஷ் குமார் அரசுக்கு பித்துப்பிடித்துவிட்டது. இது திருப்திப்படுத்தும் அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. இந்துக்களை சாதியின் அடிப்படையில் பிரிக்கிறீர்கள், இப்போது இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். உங்களின் இந்த நடவடிக்கை இந்துக்களுக்கு எதிரானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் பாஜகவும் போராட்டத்தில் ஈடுபடும். மாநிலத்தை இஸ்லாமியமயமாக்க நிதிஷ் குமார் அரசு முயற்சிக்கிறது" என்று கிரிராஜ் சிங் குற்றம்சாட்டினார்.


Next Story