சீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்


சீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்
x
தினத்தந்தி 2 Jan 2024 9:10 AM GMT (Updated: 2 Jan 2024 10:29 AM GMT)

எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால் அந்த பணிகள் முடியாமல் காலதாமதமானதால் சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசா முடிவடைந்தது.

இதனால் 263 ஊழியர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தருமாறு அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ப.சிதம்பரம் வீட்டில் கடந்தாண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கரராமனை கைது செய்தனர். சிபிஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த மாதம் 12 மற்றும் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. மீண்டும் கடந்த 23 ஆம் தேதி அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

அந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சீன ஊழியர் ஒருவருக்கு கூட விசா பெற்றுத் தர நான் ஒருபோதும் உதவவில்லை. இந்த வழக்கு என்னை தொந்தரவு செய்யும் நடவடிக்கை. எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது'என்று கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கார்த்தி சிதம்பரம் மீதான 3-வது பண மோசடி வழக்கு இதுவாகும். ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story