கேதர்நாத் யாத்திரை முன்பதிவு: கடும் பனிப்பொழிவு காரணமாக நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு


கேதர்நாத் யாத்திரை முன்பதிவு: கடும் பனிப்பொழிவு காரணமாக நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு
x

கேதர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைப் பயணம் கடந்த மாதம் தொடங்கியது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கான யாத்திரை தொடங்கிய நிலையில், ஏப்ரல் 25-ந்தேதி கேதர்நாத் கோவில் யாத்திரையும், ஏப்ரல் 27-ந்தேதி பத்ரிநாத் கோவில் யாத்திரையும் தொடங்கியது.

இந்த நிலையில் கேதர்நாத் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. யாத்திரை செல்லும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கும் இடங்களில் பனி படர்ந்து காணப்படுகிறது. இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 3-ந்தேதி(நாளை) வரை கேதர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வானிலை மாற்றத்தைப் பொறுத்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story